கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமலை டாப் டிவிஷன் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்றது. வால்பாறை வந்தவுடன் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கொடி கம்பங்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது. மேலும் கோவை நோக்கி சென்ற மற்றொரு அரசு பேருந்து மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 21 பயணிகள் காயம் அடைந்தனர். உடனடியாக காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.