2030 ஆம் ஆண்டுக்குள், பூமியைச் சுற்றும் வட்டப்பாதையில் சுமார் ஒரு லட்சம் செயற்கைக்கோள்கள் இருக்கலாம் என்று அண்மையில் வெளியான ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய இணையத்திற்காக ஆயிரக்கணக்கில் செயற்கைக்கோள்களை ஏவுவதால், விண்வெளியில் ஒரு பெரிய ‘டிராஃபிக் ஜாம்’ உருவாகி வருகிறது.

ஒரு காலத்தில் தெளிவாக இருந்த நமது இரவு வானம், இப்போது இந்தச் செயற்கைக்கோள்களால் ஏற்படும் ‘ஒளி மாசுபாட்டால்’ மூடப்பட்டு வருகிறது. இதனால், ஹப்பிள் போன்ற சக்திவாய்ந்த தொலைநோக்கிகள்கூட சரியாக வேலை செய்ய முடியாமல் தவிக்கின்றன. நாம் பிரபஞ்சத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் கருவிகளின் பார்வையை இந்தச் செயற்கைக்கோள்கள் சிதைத்து, சேகரிக்கப்படும் தரவுகளின் துல்லியத்தையும் குறைக்கின்றன.

விண்வெளியில் எத்தனை செயற்கைக்கோள்களை ஏவலாம், அவை ஆராய்ச்சியை எப்படிப் பாதிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் உறுதியான விதிமுறைகள் எதுவும் இல்லாததுதான் இப்போதுள்ள பெரிய பிரச்னை.

குறைந்த புவி வட்டப்பாதை என்பது ஒரு சிலரின் லாபத்திற்காகப் பயன்படுத்தப்படும் வளமாக இல்லாமல், மனிதகுலம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய பொதுச் சொத்தாகக் கருதப்பட வேண்டும். விண்வெளி தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப, சர்வதேச அமைப்புகளால் அதைப் பின் தொடர முடியவில்லை.

நாம் உடனடியாக விழித்துக்கொண்டு, விண்வெளி ஆராய்ச்சியைப் பாதிக்கும் இந்தச் செயற்கைக்கோள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளையும், மேற்பார்வையையும் கொண்டு வர வேண்டும். இல்லையெனில், பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு ஈடுசெய்ய முடியாத நிரந்தர சேதம் ஏற்படக்கூடும். விண்வெளியைக் காப்பாற்றவும், எதிர்கால ஆராய்ச்சியைப் பாதுகாக்கவும் நாம் இப்போதே விரைவாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.