மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த 2 பேரும் மாரி செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாரி செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாரி செல்வத்தை தாக்கிய குற்றத்திற்காக அண்ணா நகர் முந்திரி தோப்பைச் சேர்ந்த சகோதரர்களான இளங்கோ(22) மற்றும் அன்பு(21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.