சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டி குட்டை தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சரோஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மகன்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 15-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சரோஜா திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சரோஜாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு பின்புறம் இருக்கும் கிணற்றில் சரோஜா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரோஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.