ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையத்தில் வேன் டிரைவரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கோபாலபுரத்தில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்திகேயன் 14 பேரை வேனில் அழைத்துச் சென்றார். இதனையடுத்து மதியம் அனைவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுல்தான்பேட்டை காமநாயக்கன்பாளையம் அருகே சென்றபோது வேனின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 14 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.