அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் சார்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு தொடக்க நிலை நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை செய்தல், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குதல் போன்ற நிர்வாக பணிகள் மாவட்ட வட்டார கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சில மாவட்டங்களில் இந்த வேலைகளில் கால தாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்ட காலத்தில் உரிய  ஆணைகள்  வழங்கப்படவில்லை எனவும் பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டு 10 வருடத்திற்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நீண்ட காலமாக பணி வரன்முறை தகுதிக்கான பருவம் முடிக்கப்படவில்லை என ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் வருந்தத்தக்கதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை செய்தல் போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான ஆணைகளை எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காதபடி துரிதமாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.