தமிழகத்தில் “கஞ்சா சாகுபடியே இல்லை” (0 Ganja Cultivation) என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் (Government Stanley Hospital) பின்புறத்திலேயே கஞ்சா செடி செழித்து வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அது தொடர்பான வீடியோவையும் இணைத்துள்ளார்.

“அமைச்சர் அவர்களே, அப்புறம் இது என்ன?” என்ற கேள்வியோடு அவர் பகிர்ந்துள்ள இந்த ஆதாரம், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை வலுப்படுத்தியுள்ளது. மருத்துவமனை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, அதுவும் அரசுக்குச் சொந்தமான இடத்திலேயே சட்டவிரோத கஞ்சா செடி வளர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழகத்தில் கஞ்சாவே இல்லை” என்று அதிகாரிகள் கூறி வரும் வேளையில், தலைநகரின் மிக முக்கியமான அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கஞ்சா செடி கண்டறியப்பட்டுள்ளது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் எடுக்கப்படப்போகும் நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.