மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பர்சாலே கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தான் இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள ஒரு வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் சடங்கு (ஹல்தி விழா) மிகவும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

இதற்காக வீட்டின் முன்றிலில் இரும்புத் தூண்களால் ஆன பிரம்மாண்டமான பந்தல் (மணமேடை) அமைக்கப்பட்டிருந்தது. விழா உற்சாகமாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென வானிலை மாறி கடுமையான தூசிப் புயலும், சூறாவளிக் காற்றும் வீசத் தொடங்கியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த கனமான இரும்புப் பந்தல் தரையிலிருந்து பெயர்ந்து காற்றில் பறக்கத் தொடங்கியது. பந்தல் பறந்துவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த சில தைரியமான இளைஞர்கள் அதன் இரும்புத் தூண்களைத் தங்களின் கைகளால் பலமாகப் பிடித்துக் கொண்டு தரையோடு நிறுத்தப் போராடினர்.

ஆனால் இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனித சக்தி தோற்றுப்போனது. காற்றின் வேகம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், பந்தல் கம்புகளைப் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டே அந்த பிரம்மாண்ட பந்தல் அப்படியே அந்தரத்தில் பறந்தது.

ஹாலிவுட் பட ஸ்டண்ட் காட்சி போல இளைஞர்கள் காற்றில் தொங்கியபடி மேலே தூக்கப்பட்டதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். நல்லவேளையாக இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், இந்த சூறாவளி விபத்து குறித்த லைவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது நெட்டிசன்களை உலுக்கி வருகிறது.