கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் உள்ள ‘விஷால் மார்ட்’ வணிக வளாகக் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்குள்ள லிஃப்டில் 9 பேர் ஏறி இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லிஃப்ட் பாதியிலேயே ஸ்தம்பித்து நின்றது.

லிஃப்ட் கதவுகள் திறக்காததால் உள்ளே இருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து அலறினர். மால் ஊழியர்கள் கதவைத் திறக்கப் போராடியும் முடியாததால், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக ‘112’ என்ற அவசர உதவி எண்ணுக்குத் தகவல் கொடுத்தனர்.

\

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சுமார் ஒரு மணி நேரம் அதிரடியாகப் போராடி லிஃப்டில் சிக்கியிருந்த 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகங்களில் லிஃப்ட் பராமரிப்பு மற்றும் அவசர கால பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இந்த விபத்து மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.