விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எஸ்மிதா(4) கோகுல் ராஜ்(2 1/2) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் எஸ்மிதா அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை பவானி தனது மகளை திருக்குணம் கூட்டுரோடு பகுதியில் வைத்து பள்ளி வேனில் பள்ளிக்கு ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அக்காவை பார்ப்பதற்காக கோகுல்ராஜ் ஆவலுடன் ஓடி வந்தான்.

அப்போது வேன் பின் சக்கரத்தில் அருகே கோகுல்ராஜ் நின்று கொண்டிருந்தான். இதனை அறியாமல் டிரைவர் வாகனத்தை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி கோகுல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனை பார்த்ததும் பவானி கூச்சலிட்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகுல் ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.