கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். இது தொடர்பாக இளம் பெண்ணின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. எனவே அந்த பெண்ணின் தந்தை சந்திரப்பா மற்றும் உறவினர்கள் வாலிபரின் வீட்டுக்கு சென்று அவருடைய தாயாரிடம் தகராறு செய்துள்ளனர்.

அதோடு அவரின் தாயாரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது அனுமவ்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சந்திரப்பா உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.