சனாதன தர்மத்தில் வெள்ளிக்கிழமை என்பது செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமிக்கும், சுக்கிர பகவானுக்கும் மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த புனித நாளில் மகாலட்சுமியை முறைப்படி வழிபட்டு, விரதம் இருப்பதன் மூலம் வீட்டில் சுபிட்சமும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம். ஆனால், அதே வேளையில் வெள்ளிக்கிழமைகளில் நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள், தாயாரின் கோபத்திற்கு ஆளாக்கி, சுக்கிரனின் பலத்தைக் குறைத்துவிடும் என்றும் சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.
வெள்ளிக்கிழமையன்று பணப் பரிவர்த்தனைகள் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்நாளில் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. ஏனெனில், வெள்ளிக்கிழமையில் லக்ஷ்மி தேவியின் வடிவாகக் கருதப்படும் பணத்தை பிறருக்குக் கடனாகக் கொடுப்பது, வீட்டில் உள்ள செல்வத்தை வெளியேற்றுவதற்குச் சமம் என்று நம்பப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக் கூடும்.
உணவுப் பழக்கத்திலும் வெள்ளிக்கிழமைகளில் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். இந்நாளில் அசைவ உணவுகளை உட்கொள்வதையும், புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். புளிப்பான உணவுகள் சுக்கிர பகவானின் சுப பலன்களைக் குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே, வெள்ளிக்கிழமையன்று சாத்வீக உணவுகளை உட்கொள்வதே வீட்டின் அமைதிக்கும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதற்கும் வழிவகுக்கும்.
மேலும், வெள்ளிக்கிழமையன்று சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வதிலும் எச்சரிக்கை தேவைப்படுகிறது. குறிப்பாக வெள்ளி பொருட்கள் மற்றும் சர்க்கரையை இந்நாளில் பிறருக்கு தானமாக அளிக்கக் கூடாது. சர்க்கரையும் வெள்ளியும் சுக்கிர பகவானோடு தொடர்புடையவை என்பதால், அவற்றை வெள்ளிக்கிழமையன்று தானம் செய்வது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக் பலவீனப்படுத்தி, நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று ஆன்மீக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
