நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி – நல்லக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் குறுகிய பாலமாக இருப்பதினால் அவசர தேவைகளுக்கு இந்த வழியே பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. மேலும் தற்போது இந்த பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. அதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

அதேபோல் பாலத்தின் அருகே உள்ள கிராமங்களில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் பாலத்தை சீரமைத்து தர வில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அதனால் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.