மும்பை நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு மனிதநேய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருந்தாளி என்பது கடவுள் என்ற இந்திய பழமொழிக்கு உயிரூட்டும் இந்த சம்பவத்தில், ஒரு குரங்கு உணவகத்துக்குள் நுழைந்து விருந்தாளிபோல அமர, ஊழியர்கள் அதனை விரட்டாமல் அன்போடு வரவேற்று, பழங்கள் மற்றும் காலை உணவுகளை வழங்கினர்.

இந்த வீடியோவை Woke Eminent என்ற நிறுவனம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், அந்த குரங்கு அமைதியாக உணவகத்துக்குள் நுழைந்து மேசையொன்றில் அமர, ஊழியர்கள் அதை அச்சமின்றி வரவேற்கின்றனர். மேலும், வாழைப்பழம் மற்றும் பிற பழங்களை குரங்கிற்கு பரிமாறுகின்றனர். அருகில் இருந்த வாடிக்கையாளர்களும் புன்னகையுடன் அந்த காட்சியை ரசிக்கின்றனர். உணவக சுவரில் காணப்படும் தெய்வ உருவங்கள் இந்த நிகழ்வுக்கு ஆன்மீக உந்துதலாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

இந்த நிகழ்வு, இந்தியாவில் விலங்குகளுக்கும் மனிதர்களைப் போலவே மரியாதை வழங்கப்படும் என்பதையும், பாரம்பரியமாக விருந்தோம்பலை அடுத்தடுத்த தலைமுறைகள் பேணிக்கொண்டுவரும் விதத்தையும் தெளிவாக காட்டுகிறது. ஒருவருக்கொருவர் அன்பாக நடந்துகொள்வது மட்டுமின்றி, மற்ற உயிர்களுக்கும் கருணையுடன் நடந்துகொள்வதன் அவசியத்தை இந்த வீடியோ எடுத்துரைக்கிறது. இது போன்ற நிகழ்வுகள், இந்தியாவின் மனிதநேய பண்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என சொல்லலாம்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன் பலரும் அதனை ரசித்து, நெகிழ்ச்சியுடன் கருத்துகள் தெரிவித்துள்ளனர். “இந்தக் குரங்கு தான் உண்மையிலே விஐபி!” என்று ஒருவர் புகழ்ந்திருக்க, “இது தான் சனாதன தர்மத்தின் உண்மை முகம்” என மற்றொருவர் பக்திபூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார். “நான் அறிந்த சில மனிதர்களைவிட இந்தக் குரங்கு நன்றாக நடந்து கொள்கிறது!” என நக்கலாக ஒருவர் எழுதியுள்ளார். இந்த வீடியோ தற்போது இந்தியாவின் விருந்தோம்பல் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் காட்டும் வகையில் பரவிக் கொண்டிருக்கிறது.