பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில், ஒரு மெக்கானிக் தனது குழந்தைகளின் கண் முன்னாலேயே ரவுடிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையே அதிரவைத்துள்ளது. 45 வயதான ரஷீத் பாஷா என்ற மெக்கானிக், தனது பகுதியில் ஒரு புதிய கேரேஜ் கட்டுமானப் பணியைத் தொடங்கியுள்ளார். இதைக் கவனித்த மூன்று பேர் கொண்ட ரவுடிக் கும்பல், ரஷீத்திடம் “50 ஆயிரம் ரூபாய் மாமூல் கொடு” என மிரட்டியுள்ளது. உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை அநியாயமாகத் தர முடியாது என ரஷீத் மறுக்க, அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது.

​ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், ரஷீத்தின் இரண்டு பிஞ்சு குழந்தைகள் பார்த்திருக்கவே, கிரிக்கெட் பேட் மற்றும் மூங்கில் கம்புகளுடன் வந்த அந்த ரத்தவெறி கும்பல் ரஷீத்தை சரமாரியாகத் தாக்கியது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ரஷீத், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொடூரத் தாக்குதலின் வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகி நெஞ்சைப் பதறவைக்கின்றன. தலைமறைவான அந்தக் கொலையாளிகளைப் போலீசார் தேடி வரும் நிலையில், அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!