கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீநாத் – பூஜா தம்பதி. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். பூஜா டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு தனக்கென்று ஒரு பாலோவர்ஸ் கூட்டங்களை வைத்துக்கொண்டு அவர்களுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார்.

இது பூஜாவின் கணவர் ஸ்ரீநாத்துக்கு பிடிக்காததால் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் ரீல்ஸ் வெளியிட்டதால் தனக்கு கிடைத்த புகழை விட முடியாமல் தொடர்ந்து காணொளிகள் பதிவிட்டு பல பாலோவர்ஸுடன் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே கடந்த திங்கள்கிழமை அன்று தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஸ்ரீநாத் தனது காதல் மனைவி பூஜாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார்.

பிறகு பூஜாவின் தந்தை ராஜசேகருக்கு நடந்தவற்றை கூறி தகவல் தெரிவிக்க வீட்டிற்கு விரைந்து வந்தவர் தனது மருமகனுடன் சேர்ந்து மகளின் சடலத்தை கல்லை கட்டி ஆற்றில் வீசியுள்ளார். இருவரும் எந்த சலனமும் இல்லாமல் மூன்று நாட்களைக் கடந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீநாத் அவசர உதவி எண்ணான 112 க்கு அழைத்து தனது மனைவி பூஜாவை கொலை செய்ததையும் மாமனார் உதவியுடன் உடலை ஆற்றில் வீசியதையும் கூறியுள்ளார். இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.