இன்ஸ்டாகிராமில் ‘ட்ரெண்டிங்’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து வைரலாக வேண்டும் என்ற ஆசை, அரியானாவைச் சேர்ந்த 18 வயது முகமது மொயினை மரணக் குழியில் தள்ளியுள்ளது. நுஹ் பகுதியில் உள்ள டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில், கையில் ‘ரெட் புல்’ கேனுடன் ஸ்டைலாக ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் மொயின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த ஷாத் மற்றும் கேமராமேன் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறிய வீடியோவுக்காகத் தேசிய நெடுஞ்சாலையில் உயிரைப் பணையம் வைத்த இந்த இளைஞர்களின் செயல், அவர்களின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

​சமீபகாலமாக, அதிவேகச் சாலைகளிலும், ஆபத்தான இடங்களிலும் ரீல்ஸ் எடுப்பது இளைஞர்களிடையே ஒரு போதையாகவே மாறிவிட்டது. “லைக்ஸ்” மற்றும் “ஃபாலோவர்ஸ்” எண்ணிக்கையை விட உங்கள் உயிர் விலைமதிப்பற்றது என்பதை இந்தச் சம்பவம் உரக்கச் சொல்கிறது. சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற விபரீத விளையாட்டுகள் எப்போது முடிவுக்கு வரும்? ஒரு சில நொடி விளம்பரத்திற்காகத் தங்கள் எதிர்காலத்தையே தொலைக்கும் இளைஞர்களுக்கு, மொயினின் மரணம் ஒரு பாடமாக அமைய வேண்டும்.