சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தலை, முகம், கழுத்து உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் மூதாட்டி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது மூதாட்டியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் மர்ம நபர்கள் அரிவாளால் மூதாட்டியை வெட்டி கொலை செய்துவிட்டு தங்க கம்மலை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதே போல பீர்க்கன்காரணை பகுதியில் இருக்கும் செல்வ விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ஐம்பொன் சாமி சிலையை திருடி சென்றுள்ளனர். ஒரே நபர்கள் தான் இருவேறு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.