கோடை காலத்திலோ அல்லது தாகம் எடுக்கும் நேரங்களிலோ உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தருவதில் இளநீருக்கு நிகர் எதுவுமே இல்லை. ஆனால், பல நேரங்களில் நாம் ஆசையோடு பணம் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரே இருக்காது அல்லது சுவையில்லாத வெறும் சக்கையாக அமைந்துவிடும்.
இளநீர் விற்பனையாளரை நம்பி நாம் வாங்கும் போது, சில சமயங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் நமது பணமும் வீணாகிறது, குடிக்க வேண்டும் என்ற ஆசையும் கெட்டுப்போகிறது. ஆனால், இளநீரை வெட்டாமலேயே அதனுள் நிறைய தண்ணீர் இருக்கிறதா அல்லது தடிமனான வழுக்கை இருக்கிறதா என்பதை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு எளிய ரகசியமாகும்.
இளநீரைத் தேர்ந்தெடுக்கும் போது அதைக்கையிலெடுத்துக் காதருகே கொண்டு சென்று நன்றாகக் குலுக்கிப் பார்ப்பதே முதல் மற்றும் மிக முக்கியமான வழியாகும். இளநீரைக் குலுக்கும் போது “கலக் கலக்” என உரத்த சத்தம் கேட்டால், அதனுள் தண்ணீர் குறைவாகவும் காற்று அதிகமாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.
மாறாக, குலுக்கும் போது எந்தச் சத்தமும் கேட்காமல் அல்லது மிகக் மெல்லிய சத்தம் மட்டும் கேட்டால், அது இளநீரின் உட்பகுதி முழுவதும் தண்ணீரால் நிரம்பியுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். அதேபோல, இளநீரின் அளவைப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது; மிகப்பரிய அளவிலான இளநீரில் தேங்காய் தடிமனாக முற்றித் தண்ணீர் சுவை குறைந்துவிட வாய்ப்புள்ளது.
நடுத்தர அளவிலான, பச்சை நிறம் மாறாத இளநீர்களே அதிகத் தண்ணீரும் மிதமான வழுக்கையும் கொண்டதாக இருக்கும். அதேபோல, உங்களுக்கு இளநீருக்குள் நல்ல கெட்டியான வழுக்கை இருக்க வேண்டும் என விரும்பினால், சற்று லேசான மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் கலந்த இளநீரைத் தேர்ந்தெடுக்கலாம்.
இளநீரின் காம்புப் பகுதி பச்சையாகவும், அடியில் வட்ட வடிவப் பகுதி மிருதுவாகவும் இருந்தால் அது புதிய மற்றும் சுவையான இளநீர் ஆகும். இனிமேல் இளநீர் வாங்கும் போது கடைகாரர் தருவதை அப்படியே வாங்காமல், இந்தச் சின்னச் சின்ன நுட்பங்களைக் கையாண்டு பார்த்தாலே போதும்; ஏமாறாமல் அதிகத் தண்ணீரும் சுவையான வழுக்கையும் கொண்ட தரமான இளநீரை உங்களாலேயே சுலபமாகக் கண்டறிந்து வாங்கிட முடியும்.
See this Instagram video by @indiaviralpost_ https://t.co/5JkUbI7Cvj
“>
