பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் இப்போ ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அரசு விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, லாகூர் மற்றும் கராச்சியில் நடக்கும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மைதானங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. ஆனால், டிவியில் மேட்ச் பார்க்கும்போது மட்டும் ரசிகர்கள் விசிலடிப்பது போலவும், சத்தம் போடுவது போலவும் பின்னணியில் ‘செயற்கை ஒலி’ (Artificial Crowd Noise) பயன்படுத்தப்படுவது ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது.

​”யாருக்கு நாமம் போடுறீங்க?” என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (PCB) விளாசி வருகின்றனர். மைதானம் காலியாக இருப்பதை மறைக்க இப்படி ஒரு தில்லுமுல்லு வேலையைச் செய்வதா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே ஒளிபரப்பு கோளாறுகள் மற்றும் மைதானத்தில் நடந்த சில விசித்திரமான சம்பவங்களால் பிஎஸ்எல் தொடர் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில், இந்த ‘போலி சத்தம்’ விவகாரம் அந்தத் தொடரின் நற்பெயரையே கெடுத்துவிட்டது. பிசிபி தலைவர் மோசின் நக்வி மீது ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.