கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வந்துள்ளார். 2022-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவரது ரசிகர் பட்டாளம் இந்தியாவில் இன்னும் பெருகியுள்ளது. மெஸ்ஸியின் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு கொல்கத்தா வந்தடைந்தார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்ட 70 அடி உயர மெஸ்ஸியின் சிலையை அவர் இன்று திறந்து வைத்தார். மெஸ்ஸியின் வருகையை ஒட்டி, இந்திய கால்பந்து ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, புதிதாகத் திருமணமான ஒரு ரசிகை தனது கணவருடன், மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காகத் திட்டமிட்டிருந்த தங்கள் தேனிலவு (ஹனிமூன்) பயணத்தையே ரத்துசெய்துவிட்டு வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2010 முதல் மெஸ்ஸியின் தீவிர ரசிகையாக இருக்கும் அவர், “மெஸ்ஸி எப்போதாவதுதான் இங்கு வருகிறார்.

அதனால் அவரைப் பார்க்க தேனிலவைத் தள்ளி வைத்தோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மெஸ்ஸி இதற்கு முன்னர் 2011-ல் கொல்கத்தாவில் வெனிசுலாவுக்கு எதிராக நட்புறவுப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.