தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுக்கான போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. வருகிற 23-ஆம் தேதி இந்த போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எனவும் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் 2022 -2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கலந்து கொள்ளலாம்.

அதேபோல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு வருகிற 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு பணியாளர்களுக்கான மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும். அதேபோல கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்படும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.