திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் விளையாட்டு அலுவலர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கலெக்டர்  பேசியபோது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு பிரிவு சார்பாக முதலமைச்சர்கோப்பைக்கான  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகள் அனைத்தும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 25-ம் தேதி சதுரங்க போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் போட்டி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வரவேண்டும். அதேபோல் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பதிவு செய்த நகல், மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை நகல், அரசு ஊழியர்களின் அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகல் போன்றவற்றுடன் வங்கி கணக்கு சேமிப்பு புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.