மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 -ஆம் தேதி வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கார்த்தி, மாதவன், முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய  மீனவர்களும்  இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை கோடிய கரைக்கு தென்கிழக்கு பகுதியில் கடலில் மீன் பிடித்து  கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் தரங்கம்பாடி மீனவர்களை இரும்பு பைப்பால் தாக்கி அவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, தூண்டில், பேட்டரி போன்றவற்றை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் மீனவர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மீனவர்கள் ஆறு பேரும் நேற்று கரை திரும்பியுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை மீது தாக்குதல், கொள்ளை, மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.