ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது.

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். கண்ணீர் புகை வீசிய இருவரும் சர்வாதிகார ஆட்சி ஒழிக என முழக்கமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியுள்ளனர். சபாநாயகரை நோக்கி ஓடி வந்த நபரை சிவசேனா எம்பி அரவிந்த் மடக்கி பிடித்துள்ளார். பின் பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மக்களவையில் கண்ணீர் புகை குப்பியை வீசியவரின் அடையாளம் தெரிந்தது. சாஹர் என்பவர் கண்ணீர் புகை குப்பிகளை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. நீலம், அமோல் ஷிண்டே , சாஹர் என 4 பேரை டெல்லி போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 கட்ட சோதனையை தாண்டி நாடாளுமன்றத்திற்கு உள்ளே நுழைய முடியும் என்ற சூழ்நிலையில், பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை.. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பதவியேற்புகாக ராய்ப்பூருக்கு பிரதமர் சென்றிருந்த நிலையில், அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதான இரண்டு பேரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திலும் விசாரணையை தொடங்கினர். என்.ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த வழக்கை விசாரிக்கும் என டெல்லி காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது,  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தலா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அவை செயல்படுவதை உறுதிப்படுத்துவது நம் பொறுப்பு. அவையில் எழுந்தது சாதாரண புகை தான், அது குறித்து அச்சப்படத் தேவையில்லை. பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. அனைவரின் கருத்தையும் பரிசீலித்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.  இதனிடையே மக்களவை எம்பிக்கள் சிலர் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.