மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், ஊழியர் சங்கங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மின்சாரத்துறை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டது. பொது மக்களின் பாதிப்பு, எதிர்வரும் பொங்கல் பண்டிகை கருத்தில் கொள்ளாமல் இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்த போராட்டத்திற்கு தடை விதிக்காவிட்டால் சமுதாயம் ஸ்தம்பித்துவிடும் விடும் எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தொழில் தகராறு சட்டத்தின்படி சமரசபேச்சுவார்த்தை துவங்கிய பிறகு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது என்பதால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அது தொடர்பாக அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மின்வாரிய ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகவும், இது குறித்து அறிவிப்பை கடந்த 5ஆம் தேதியே அனுப்பிய போது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது சட்ட விரோதமானது எனவும் தெரிவித்தார்.

மேலும் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள் பள்ளி, கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இந்த அனைத்து வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கம் நாளை அழைப்பு விடுத்த்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் வேலைநிறுத்தம் செய்வது சட்ட விரோதமானது எனக் கூறியும், அந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.