திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்வதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பெற்ற பிறகு தான் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும் எனவும் விடைத்தாள் நகலை இணையதளம் மூலமாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் வருகின்ற ஜூலை 20 முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். அதன்படி மறு மதிப்பீடு செய்வதற்கு இணையதளம் மூலமாக உரிய கட்டணத்துடன் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.