தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இதர துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் இணையதளம் வழியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கடந்த ஜூலை 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கலந்தாய்வுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முன்னுரிமை பட்டியல் இன்று முதல் வெளியிடப்படும். இதில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் ஜூலை 18ஆம் தேதிக்குள் முறையிட வேண்டும் எனவும் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூலை 20ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.