கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார்.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது “தமிழகம் முழுவதும் இன்று 8,340 நடுநிலை பள்ளிகள், 3,547 உயர்நிலை பள்ளிகள், 4,221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16, 108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 46,22,324 மாணவர்கள் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலவச மடிக்கணினி திட்டம் சென்ற 3 கல்வி வருடங்களாக வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு நிதி நிலைமை சரியானதும், மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.