மழைக்காலம் தொடங்கிவிட்டாலே மலைகளின் இயற்கை எழில் பல மடங்கு அதிகரித்துவிடும். பச்சைப்பசேல் என்ற மரங்கள், மேகங்கள் உரசிச் செல்லும் மலைச்சிகரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் என இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு மழைக்காலம் ஒரு வரப்பிரசாதம்.

இந்தச் சூழலில், நீங்கள் ஒரு அருமையான சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ‘மேகங்களின் உறைவிடம்’ என்று அழைக்கப்படும் மேகாலயா உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். மழைக்காலத்தில் மேகாலயாவின் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; அது ஒரு பூலோக சொர்க்கமாகவே மாறிவிடுகிறது.

இங்குள்ள ஷில்லாங்  நகரம், அதன் குளுமையான வானிலை மற்றும் அழகான இயற்கை காட்சிகளால் பயணிகளைப் பெரிதும் கவர்கிறது. இதனை ‘கிழக்கின் ஸ்காட்லாந்து’ என்றும் அழைப்பார்கள். இங்குள்ள ஏரிகளும், மலையடிவாரப் பாதைகளும் மழைக்காலத்தில் காண்போரைக் கட்டிப்போடும் அழகுடன் திகழ்கின்றன.

அடுத்ததாக, உலகிலேயே அதிக மழை பொழியும் இடங்களில் ஒன்றான சீரபூஞ்சி  மற்றும் மாசின்ராம்  பகுதிகளைக் குறிப்பிடலாம். இங்குள்ள மிக உயரமான நோஹ்காலிகாய் அருவி மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும் காட்சியைப் பார்ப்பதே தனி அனுபவம். மேலும், அங்குள்ள இயற்கையான ‘உயிருள்ள வேர் பாலங்கள்’  மனிதர்களின் பொறியியல் வியப்புக்கும் இயற்கைக்கும் சான்றாக அமைந்துள்ளன.

மேலும், மேகாலயாவில் உள்ள தவ்கி  ஆற்றுப்பகுதி, படிகம்போல தெளிவான தண்ணீருக்குப் பெயர் பெற்றது. மழைக்கால மேகக் கூட்டங்களுக்கு இடையே இந்த அழகிய இடங்களைச் சுற்றிப்பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளைத் தரும். எனவே, இந்த மழைக்காலத்தில் இயற்கையின் உண்மையான அழகைக் கண்டு ரசிக்க விரும்புபவர்கள், தாராளமாக மேகாலயாவிற்குப் பயணப்படலாம்!