கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லன் விலையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பபின் பிரியன்(27) தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த 4 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயபிரியா மணவாளக்குறிச்சி தருவையில் நகை அடகு கடை ஒன்றில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது பபின்பிரியன் தனது மனைவியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார்.

மேலும் ஜெயப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே பபின் பிரியனின் நண்பர்களான சரண், 18 வயது சிறுவன் ஆகியோரும் ஜெயபிரியாவின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜெயப்பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.