தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில் வாஞ்சி மணியாச்சி – நாகர்கோயில் இரட்டை ரயில் பாதை சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரூ4,586 கோடி மதிப்பிலான 4 சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடியில் ரூபாய் 124.32 கோடியில் 5 எம்.எல்.டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திருச்செந்தூர் அருகேவுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இந்த விழாவில் தமிழில் வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது, வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடி எழுதி வருகிறது. திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. இந்தத் திட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற்றமடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது.தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம்.

காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறேன், அவை கசப்பான உண்மைகள். மக்களின் சேவகனாக நான் உங்களின் விருப்பங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். கசப்பான உண்மையைச் சொல்கிறேன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த நல திட்டங்கள் இப்போது நிறைவேறுகின்றன.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாடுபடுவேன். எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும். கட்சியின் சித்தாந்தத்தை நான் கூறவில்லை, வளர்ச்சி முன்னேற்றத்திற்கான சித்தாந்தத்தை கூறுகிறேன். இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியின் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது. மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 1300 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் கட்டமைப்புகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 35 சதவீதம் கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது. வளர்ச்சி முன்னேற்றத்திற்கான கோட்பாடுகளையே நான் பேசுகிறேன். ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து தற்போதைய திட்டங்களை நிறைவேற்றுவேன். மூன்றாவது முறையாக நான் பிரதமர் ஆனால் தமிழகத்திற்கான வளர்ச்சி பணிகள் தொடரும். மீண்டும் பிரதமர் ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் .தொடங்கப்பட்ட திட்டங்களை நாங்கள் முழு பலத்தோடு முடித்துக் காட்டுவோம்.இங்கு கிடைத்துள்ள அன்பை போலவே தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் என் மீது அன்பை பொழிகின்றனர்” என தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் கனிமொழி எம்பி, அமைச்சர் ஏ.வ வேலு உள்ளிட்டோர்  பங்கேற்றனர். மேலும் வ உ சி துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முதலில் தேசிய கீதமும் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.