சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்துகள் இயங்காததால் பொது மக்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பயணிக்க உதவுமாறும், விதிகளுக்கு உட்பட்டு பயணிகளிடம் கட்டணம் வசூலிக்குமாறும் சென்னை காவல்துறை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.