சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிற்சங்கத்திடம் பேசியுள்ளோம். பேருந்துகளை இயக்குவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பிரச்னை பேசி தீர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், விரைவில் நிலைமை சரிசெய்யப்படும், இயல்பு நிலை திரும்பும் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே, அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் அவதியடைவதால், டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் உதவ காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.