சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சித்ரா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரண்டு மகள்களுடன் சித்ரா பொருட்கள் வாங்குவதற்காக தியாகராய நகர் பகுதிக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்தார். இந்நிலையில் சென்னை கோட்டை ரயில் நிலையம் வந்ததும் சித்ராவும் அவரது மகள்களும் வேளச்சேரி செல்லும் மின்சார ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.

அதே நேரம் வேளச்சேரி நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்ததை பார்த்ததும் பதற்றமடைந்த சித்ரா வேகமாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தனது மகள்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளி விட்டதால் சித்ரா நிலைதடுமாறி விழுந்தார். இதனால் மின்சார ரயில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்காக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.