திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்ப பட்டியில் கட்டிட வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ்(8) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தர்மராஜ் பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு சிறுவனை கடித்தது. இதனால் வலியில் சிறுவன் அலறி துடித்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் பாம்பை அடித்துள்ளார். பின்னர் தனது மகனை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

அங்கு தனது மகனை பாம்பு கடித்து விட்டதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கூறி சுமார் நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பை பையில் எடுத்து வந்து திறந்து காண்பித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். டாக்டரிடம் காண்பிப்பதற்காக செல்வம் பாம்பை பையில் எடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.