சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் பிரபாகர் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டு ரூபாய்களை மாற்றிக் கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகர் அண்ணா நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு மற்றொரு கிளை அலுவலகத்தில் இருந்து 4 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் போலீஸ் என கூறி பிரபாகரிடம் இருந்த 4 லட்ச ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து பிரபாகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் அரும்பாக்கத்தில் நகை கடன் கொடுக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஆண்டு சக ஊழியர்களை துப்பாக்கி முனையில் கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பிரபாகரிடமிருந்து பறித்த பணத்தை உல்லாசமாக இருக்க இருவரும் செலவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.