அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மத்திய கிழக்கு விவகாரத்தில் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வதாக முன்னாள் அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் போரை உடனடியாக நிறுத்த டிரம்ப் விரும்பினாலும், அமெரிக்காவில் உள்ள செல்வாக்குமிக்க மற்றும் கோடீஸ்வரர்களான இஸ்ரேல் ஆதரவாளர்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் டிரம்ப் போரை நிறுத்த முயற்சித்தால், இந்த செல்வந்தர்கள் அவருக்கு வழங்கும் அரசியல் ஆதரவை திரும்பப் பெறுவதாக மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானை அழித்து பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாகவும், இது டிரம்பின் அமைதி முயற்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் மெக்ரிகோர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்நிலையில் ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது இஸ்ரேலிய ஆதரவாளர்களின் அழுத்தத்திற்கு பணிந்து போரைத் தொடர்வதா என்ற இந்த ‘உண்மையான இக்கட்டான சூழலில்’ டிரம்ப் சிக்கியுள்ளதாக அவர் மேலும் விளக்குகிறார்.