கேரள மாநிலம் கோழிக்கோடு எரஞ்சிப்பாலம் சிக்னல் அருகே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியபோது, அதிலிருந்து தப்பிக்க நினைத்த ஒரு நடுத்தர வயது நபர், தனது ஸ்கூட்டரை நடைபாதையில் (Footpath) ஏற்றி வேகமாகச் செல்ல முயன்றார். அப்போது அந்தப் பாதையில் நடந்து வந்த வெள்ளை சேலை கட்டிய, நரைத்த முடியுடன் கூடிய ஒரு முதிய தாய், சற்றும் தயக்கமின்றி அந்த ஸ்கூட்டரின் முன்னால் நின்று வழிமறித்தார்.

​அந்த நபர் எவ்வளவோ கெஞ்சியும், வழிவிடக் கேட்டும் அந்தத் தாய் அசையவே இல்லை. “வண்டியை ரோட்டுக்குக் கொண்டு போ” என்பது போல உறுதியாக நின்றார். ஒரு கட்டத்தில் அந்த நபர் பிடிவாதம் பிடிக்கவே, தனது செல்போனை எடுத்து வண்டியின் நம்பர் பிளேட்டைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார் அந்தத் தாய். இதைப் பார்த்து மிரண்டு போன அந்த நபர், வேறு வழியின்றி வண்டியைப் பின்னோக்கி எடுத்து மீண்டும் ரோட்டிற்கே சென்றார். இந்தச் சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்துப் பகிர, அந்தத் தாய் செய்த துணிச்சலான செயலைப் பார்த்து, “படித்தவர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்போதைக்கு இவர்தான் சோசியல் மீடியாவின் “சூப்பர் பாட்டி”