பெரு நாட்டில் சுற்றுலா சென்ற ஜப்பானிய இளம்பெண் ஒருவர், அங்கிருந்த ஒரு தெருவோர வியாபாரியைத் தவறுதலாக ‘ஏமாற்றுக்காரர்’ (Scammer) என நினைத்துத் திட்டியுள்ளார். ஆனால், அந்த வியாபாரி நேர்மையானவர் என்று பிறகு தெரியவந்ததும், அந்தப் பெண் செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. தான் செய்த தவறுக்காக எவ்விதத் தயக்கமுமின்றி நடுரோட்டிலேயே அந்த வியாபாரியின் முன்னால் மண்டியிட்டு, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

​ஜப்பானியக் கலாச்சாரத்தில் ‘மன்னிப்பு’ என்பது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண தெருவோர வியாபாரிதானே என்று நினைக்காமல், ஒரு சக மனிதரின் மனதை நோகடித்ததற்காக அந்தப் பெண் காட்டிய இந்த அடக்கம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், “ஜப்பானியர்களின் ஒழுக்கம் மற்றும் பணிவு உலகத்திற்கே ஒரு பாடம்” என்று பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.