சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். தான் அணிந்திருந்த ஹெல்மட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அங்கிருந்த சிலர் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயங்கினார். அதன் பிறகு இளம்பெண்ணை மீட்டு உடனடியாக அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் அமர வைத்து புறப்பட்டு சென்றார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.