சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று பேருந்து வந்து இறங்கியது. அப்போது இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பேருந்தையும் போகவிடாமல், பொதுமக்களையும் பேருந்தில் ஏற, இறங்க விடாமல் மாணவர்கள் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அதில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோரை வரவழைத்து இனிமேல் தகராறு செய்ய அனுமதிக்க மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு மாணவர்களை எச்சரித்து போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.