நாமக்கல் மாவட்டத்தில் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் 25 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கான கணக்கு புத்தகங்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் பிள்ளை வழங்கியுள்ளார்.

மேலும் பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க தேவையான நிதி உதவியை அழகுநகர் நல சங்க நிர்வாகி ஸ்டாலின் அளித்துள்ளார். இதனையடுத்து நாமக்கல் கோட்டத்தில் இதுவரை 1,700 கணக்குகள் தொடங்கப்பட்டதாக அஞ்சலக அலுவலர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடராஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா, வணிக வளர்ச்சி அலுவலர் சிவகுமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்ட வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், செயலாளர் ராமசாமி அழகு நகர் நல சங்கத்தின் துணைத் தலைவர் மணிராஜா, பொருளாளர் வீராசாமி உள்ளிட்ட பல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.