பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தன் மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விபரங்களை வெளியிட வேண்டும் என கூறி இருந்தார். அந்த வகையில் அவர் உட்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும் கடன் விபரங்கள் அம்மாநில அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிதிஷ்குமார் கையில் ரூபாய்.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856ம் இருக்கிறது.

அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய்.16 லட்சத்து 68 ஆயிரம் ஆகும். அதன்பின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். ஆகையால் மொத்த சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 53 ஆயிரம் ஆகும். ஒரே வருடத்தில் அவருடைய சொத்து மதிப்பானது ரூபாய்.18 ஆயிரம் அதிகரித்து உள்ளது. டெல்லியில் துவாரகா பகுதியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு இருக்கிறது.

லாலு பிரசாத் யாதவின் மகனும், துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவிடம் ரூபாய்.75 ஆயிரம் ரொக்கமும், அவருடைய மனைவி ராஜஸ்ரீயிடம் ரூபாய்.1 லட்சத்து 25 ஆயிரமும் இருக்கிறது. லாலுவின் மற்றொரு மகனும், சுற்றுச் சூழல் துறை மந்திரியுமான தேஜ்பிரதாப் யாதவிடம் ரூபாய்.3 கோடியே 20 லட்சம் சொத்து இருக்கிறது. மந்திரிகளில் ஏராளமானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக இருக்கின்றனர்.