செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சூர்யா உள்ளிட்ட இரண்டு பேரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கைது செய்தது காவல்துறை.

செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இரவு பாமக நிர்வாகி நாகராஜ் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக சம்பவம் நடந்த இரவே அஜய் என்ற நபரை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கார்த்திக்  என்ற ஒருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர்..

இந்நிலையில் இன்று முக்கிய குற்றவாளியான சூர்யா, விஜயகுமார் இருவரும் பைக்கில் காஞ்சிபுரம் சாலையை நோக்கி சென்றுள்ளனர். அப்போது போலீசார் விரட்டிச்சென்றபோது இருசக்கர வாகன தவறி விழுந்த சூர்யா மற்றும் விஜயகுமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 6 பேரில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரையும் நான்கு தனிப்படை அமைத்து தேடிவருவதாக  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.