சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் வங்கியில் பணிபுரிந்து வரும் இளம் பெண் பிரியா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடம் இடிக்கும்  பணி நடைபெற்றது தான் இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.