பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும் வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்து வரும் வேளையில், ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனா மாவட்டம், சிந்துபூர்ணி அருகே அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது  பக்ரூ என்ற கிராமத்தில், பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து அவரது கணவராலும், கொழுந்தனாராலும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர், அதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த அடுத்த கணமே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, அராஜகத்தில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களையும் உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குஷால் (கணவன்) மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ண குமார் (கொழுந்தன்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்ணைக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த அதிர்ச்சி வீடியோவில், அவர்கள் சேர்ந்து அந்தப் பெண்ணைச் செருப்பாலும், தடியாலும் இரக்கமின்றி அடித்துத் துவைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அருகில் நின்ற குழந்தைகள் அலறியபடி பயந்து நடுங்க, அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் உதவி கேட்டு பல மணி நேரம் கூக்குரலிட்டும், அண்டை வீட்டினர் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்தார்களே தவிர யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. தற்போது அந்தப் பெண்ணின் வாக்குமூலம் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.