திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உட்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அதேபோல் மதிப்பூதியம், தொகுப்பூதியம் நியமன முறையில் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவை அனைத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக பட்ஜெட்டில் உடனடியாக அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.