கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் சௌந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நவீன் குமார்(5), ரக்ஷன்(1 1/2) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் நவீன் குமார் காடம்புலியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான்.

தினமும் நவீன்குமார் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வருவான். நேற்று முன்தினம் காலை நவீன் குமாரை அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு அருகே பள்ளி வேன் வந்து நின்றது. உடனே வசந்தி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்து நவீன் குமாரை வேனில் ஏற்றி விட்டார். அந்த சமயம் 1 1/2 வயதுடைய சிறுவன் ரக்ஷன் வேனுக்கு அடியில் புகுந்து விட்டான். இதனை வசந்தியும் வேன் டிரைவரும் கவனிக்கவில்லை.

இதனால் வேன் புறப்பட்டதும் ரக்ஷன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனை பார்த்ததும் வசந்தி கதறி அழுதார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.