ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சுப்பையன் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளி பிரதீப்(10) என்ற மகனும், கனிஷ்கா(6) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்தாம் தேதி மாலை கனிஷ்கா பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர் உனது தந்தை உடல்நிலை சரியில்லாததால் உன்னை அழைத்து வர சொன்னார் என கூறி சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

பின்னர் அந்த நபர் கனிஷ்கா அணிந்திருந்த பித்தளை கம்மலை தங்கம் என நினைத்து திருடிவிட்டு செல்வராஜ் வேலை பார்க்கும் கடைக்கு அருகே சிறுமியை இறக்கிவிட்டுள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தியது குறித்து செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள்(60) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் பெருமாளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.